கிருஷ்ணகிரியில்..
கொள்ளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). இவரது மனைவி புஷ்பா (33) . இந்த தம்பதியருக்கு ஜோசிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று, தனது விளை நிலத்தில் மாற்று பயிரிட கஜேந்திரன், அவரது சொந்த டிராக்டரில் உழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது தோட்டத்திற்கு வந்த கஜேந்திரனின் மனைவி புஷ்பா, எதிர்பாராமல் டிராக்டரின் பின்பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த புஷ்பாவின் உறவினர்களும், அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து சூளகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கணவர் கஜேந்திரன் சம்பவ இடத்தை விட்டு ஓட்டம் பிடித்ததால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது உறவினர்கள் புஷ்பா சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்தனர். மேலும் போலீசாரிடம் திடீரென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டி.எஸ்.பி பாபு பிரசாந்த் நேரில் வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து இறந்த புஷ்பாவின் உடலை போலீசார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.