காதலன் கொடுத்த ஐடியா.. ஸ்கெட்ச் போட்டு அப்பாவை தூக்கிய மகள்.. மொத்த குடும்பமும் சிக்கியது எப்படி?

1867

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமத்தை சேர்ந்த 43 வயதாகும் செல்வக்குமார் கட்டிடதொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாக்கியலட்சுமி.

இவர்களுக்கு கார்த்திகா (வயது 21), சுதர்ஷினி (வயது 19) ஆகிய 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் கார்த்திகா திருநெல்வேலியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.சுதர்ஷினி 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி வீட்டின் மாடியில் கட்டிட தொழிலாளி செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து செல்வக்குமார் உடலை, அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக அடக்கம் செய்ய முயன்றுள்ளனர்.

ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கயத்தாறு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் செல்வக்குமார் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து,


பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். அதனைத் தொடர்ந்து செல்வக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி மற்றும் இரு மகள்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். எப்படி இறந்தார் என்பதிலேயே 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார்கள்.

இதனிடையே கட்டிட தொழிலாளி செல்வக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தங்கள் பாணியில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், உண்மைகளை கண்டுபிடித்தனர். செல்வக்குமார் மனைவி பாக்கியலட்சுமி, அவரது இரு மகள்கள் கார்த்திகா, சுதர்ஷினி, இவர்களுடன் கார்த்திகாவை காதலித்து வரும் கந்தவேல் ஆகியோர் தலையணை மற்றும் துண்டால் அமுக்கி செல்வகுமாரை கொலை செய்தது தெரிய வந்தது.

இதை அடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். கொலை செய்தது ஏன் என்பது குறித்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தில், கொலை செய்யப்பட்ட செல்வக்குமார் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதையறிந்த கந்தவேல் நீங்கள் ஏன் சாக வேண்டும். உங்கள் தந்தை செல்வக்குமாரை கொலை செய்யலாம் என கூறினாராம்.

கார்த்திகாவின் காதலன் கந்தவேலின் ஆலோசனையின்படி, இரவில் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த செல்வகுமாரை, பாக்கியலட்சுமி மற்றும் அவரது மகள்கள் சுபாஷினி, கார்த்திகா மற்றும் கந்தவேல் ஆகியோர் சேர்ந்து தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார்கள்

பின்னர் காலையில் செல்வக்குமார் குடிபோதையில் இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி அவர்களை நம்ப வைக்க முயன்றுள்ளனர். ஆனால் உடலில் காயங்கள் இருந்ததால் போலீசார் விசாரணையில் கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

குடித்து விட்டு தகராறு செய்த காரணத்திற்காக பெற்ற மகள்களுடன் சேர்ந்து மனைவியே கணவனைக் கொன்ற சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் காயத்தாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.