காதல் மனைவியை கொன்று தீவைத்து எரித்த கணவர்!!

7

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மனைவியை அடித்துக் கொன்று தீ வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர் அருகே உள்ள தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (40). இவரது மனைவி முனீஸ்வரி (35). பட்டாசுத் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்த தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இருவரும் சாத்தூர் அருகே உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மது போதையிலிருந்த பொன்னுச்சாமிக்கும், மனைவி முனீஸ்வரிக்கும் வீடு திரும்பியதும் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பொன்னுச்சாமி உரல் கல்லால் மனைவி முனீஸ்வரியின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்து நிலைக்குலைந்த முனீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதன்பின் தனது பைக்கில் இருந்து பெட்ரோல் எடுத்து வந்த பொன்னுச்சாமி, முனீஸ்வரியின் உடலில் ஊற்றித் தீ வைத்து எரித்துள்ளார். குடிபோதையில் இருந்த பொன்னுச்சாமி மீதும் தீப்பற்றி காயம் ஏற்பட்டது.


இது குறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முனீஸ்வரி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீக்காயமடைந்த பொன்னுச்சாமியை கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.