’சேவல் கூவுவதால் தூக்கமே கெட்டுப்போச்சு’ பரபரப்பு புகார் கொடுத்த முதியவர்!!

10

கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டம், பல்லிகல் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணா. இவருக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

இது நிலம் அல்லது பணம் பற்றியது அல்ல. அவர்கள் சேவல் தொடர்பாக சண்டையிட்டு வருகின்றனர். ராதாகிருஷ்ணாவின் பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமார் ஒரு சேவல் வளர்த்து வருகிறார்.

ராதாகிருஷ்ணா தினமும் அதிகாலை 3 மணிக்கு சேவல் கூவுவதால் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயது முதிர்ச்சியால் அவதிப்படும் ராதாகிருஷ்ணா, இரவில் தூக்கமின்மையால் அவதிப்பட்டுள்ளார்.

இதனால், மன அழுத்தத்தில் இருந்த ராதாகிருஷ்ணா, அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் (RDO) புகார் அளித்துள்ளார். ‘தினமும் காலையில் சேவல் கூவுவதால் எனக்கு தூக்கம் வரவில்லை’ என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ராதாகிருஷ்ணா மற்றும் அனில் குமார் இருவரிடமும் விசாரணை நடத்தி தீர்வு காண முயன்றனர்.

இதில், அனில் குமார் வளர்த்த சேவல் வீட்டின் மாடியில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சேவல் கூவுவது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.


இதைத் தொடர்ந்து, முதியவரைப் பாதிக்காத வகையில், மாடியின் தெற்குப் பகுதியில் சேவலுக்காக தனி கூடாரம் அமைக்க அதிகாரிகள் அனில் குமாருக்கு உத்தரவிட்டனர். இதற்காக 14 நாட்கள் காலக்கெடு நிர்ணயித்துள்ளனர். சேவல் தூக்கத்தைக் கெடுத்ததாக புகார் அளித்த விவகாரம் அப்பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.