தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேயிலை பறிக்க சென்ற பெண் மாயமானார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த அஞ்சலை என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உதகை அருகே உள்ள பேரார் பொம்மன் நகரில் வசித்து வருபவர் கோபால் இவரது மனைவி அஞ்சலை. இவர் நேற்று முன்தினம் தேயிலை பறிக்க அருகே உள்ள காலிபெட்டா என்ற பகுதிக்கு சென்ற நிலையில் மாலையில் வீட்டிற்கு திரும்பவில்லை.
அதனையடுத்து நேற்று இரவு வரை அஞ்சலையை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடினர்.
ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. காலிபெட்டா பகுதியில் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்ட போது அஞ்சலையை வன விலங்கு தாக்கி கொன்று தேயிலை தோட்டத்திற்குள் இழுத்து சென்று கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை சாப்பிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அது குறித்து உடனடியாக உதகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதகை வடக்கு சரக வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
தேயிலை தோட்டத்தில் அஞ்சலையை சிங்கம் புலி போன்ற வனவிலங்கு தான் தாக்கி இறந்திருக்கக்கூடும் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.