பிறந்தநாளில் பரிதாபமாக பலியான 3 வயதுச் சிறுவன்!!

60

பிறந்தநாளே இறந்த நாளாகவும் மாறி 3 வயசு சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இளங்காலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்.

இவரது மனைவி ஐஸ்வர்யா. கட்டிட மேஸ்திரியாக வேலைப் பார்த்து வரும் இவருக்கு அகிலேஷ்(3) என்ற மகனும், ஒரு மாத பெண் குழந்தையும் உள்ளது.

இவர்களின் வீட்டுப் பகுதியில் குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மோட்டார் நீண்ட நாட்களாக பழுதாகி இருந்த நிலையில், அந்த மோட்டார் சரி செய்வதற்காக கழற்றி சென்றுள்ளனர்.

ஆனால் மோட்டரை சரி செய்வதற்காக கழற்றிச் சென்றவர்கள், அதற்கான வயர்களை முறையாக பாதுகாப்பாக வைக்காமல் ஆங்காங்கே அப்படியே தொங்கவிட்டப்படி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறியாத சிறுவர்கள் அந்த பகுதியில் தினமும் விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை சதீஷ்குமாரின் மகன் அகிலேஷ் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கவனக்குறைவாக கீழே தொங்கிக் கொண்டிருந்த மின்ஒயரை தொட்ட நிலையில் அகிலேஷ் தூக்கி வீசப்பட்டான்.

இதனைக் கண்ட அப்பகுதியினர் சிறுவனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி அகிலேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.